Wednesday, 20 August 2014

கவி நிலவு பழநிபாரதியின் கவிதை

பிராபகரப் பிஞ்சே
மதிவதனிப் பிறையே
உன்னைச் சுற்றிலும் அடுக்கிவைக்கப்பட்டிருந்த
மணல் மூட்டைகளில்
மனிதக் கடலின் ஈரம் 
வற்றிப்போயிருந்தது
ஈரம் வற்றியது அறியாமல்
வாய் திறந்து தவித்த மீன்குஞ்சுகள்
உன் கண்களில் துடித்தன
மரணத்தின் நதிச்சுழலை
மீன்கள்
அவ்வளவு அமைதியாய்க்
கடக்குமா என்ன
அது எரிமலையின் முன்னமைதியா
பெரும் புயலின் பின்னமைதியா
தெரியவில்லை
திக்கற்ற தமிழர்களின்
வெள்ளந்திக் கண்கள்
உன்னுடையதாயிருந்தன
அங்கே
காணாமல் போன
உன் சக விளையாட்டுப் பிள்ளைகளின்
தனிமை
உன்னைச் சூழ்ந்திருந்தது
'ஊமையானது கோயில்மணி
உறைக்குள்ளே போனது நாதஸ்வரம்'
என்றான் புதுவை இரத்தினதுரை
உன் அமைதி ஆலயமணிகளை
உலுக்குகிறது
உன் மூச்சில்
ஆயிரம் நாதஸ்வரங்கள்
சைவத் துணியான
போதிமர நிழலெடுத்து
துறவாடை அணிந்துகொண்டவர்களையும்
தலைப்பாகை கட்டிக்கொண்டவர்களையும்
முக்காடு போட்டுக்கொண்டவர்களையும்
உன் அமைதி
உற்றுக் கவனித்துக்கொண்டிருக்கிறது
மூடப்பட்ட உன் கண்கள்
மீண்டும் எப்படி
இப்படிப் பிரகாசிக்கின்றன என்று
அவர்கள்
உன்னைக் கவனித்துக்கொண்டிருக்கிறார்கள்
நீ உன்னோடு மரித்த
இலட்சம் குழந்தைகளோடு
ஒளியுடன்
விளையாடிக்கொண்டிருக்கிறாய்
- பழநிபாரதி

No comments:

Post a Comment